Saturday, August 8, 2015

அணில்மொழி!

அணிலின் மொழி தெரிந்தால் நல்லது! சில காலமாக என்னோடு வசிக்கும் அணிலுக்கு என்னைக் கண்டால் பயம்! பாதி நேரம் நான் வீட்டில் இல்லையென்பதும், என் பரணில் அது கட்டிய கூட்டை நாங்கள் கலைக்கவில்லை என்பதும் அதன் பயத்தைக்குறைக்கவில்லை! இரவிலும் எட்டி எட்டிப் பார்த்து பயந்து நிற்கிறது! அதற்காக நான் வைக்கும் பழங்களை, விதைகளை நானில்லாதபோது உண்கிறது! ஆனால் அதன் கண்களில் இன்னும் பயத்தைப் பார்க்கிறேன்!அதன் மொழி தெரிந்தால் நான் விளக்கக்கூடும்! நான் பேசும் தமிழ் அதற்குப் புரியவில்லை! என் மனதின் மொழியும் தெரியவில்லை!

தனது குஞ்சுகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில், என்னை எதிரியாய்ப்பாவிக்குமோ, என் மேல் குதிக்குமோ என்ற பயம் எனக்கு! ஒருவேளை, என் கண்ணில் பயத்தின் சாயல் கண்டு அணில் நினைக்குமோ, தமிழ் தெரிந்தால் நன்றாயிருக்கும் என்று?

No comments: